Published : 03 Dec 2022 03:04 PM
Last Updated : 03 Dec 2022 03:04 PM

ஓடிடி தளத்தில் ‘வராஹ ரூபம்’ பாடல் விரைவில் சேர்ப்பு - ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி

விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தாரா’ படத்தில் ‘வராஹ ரூபம்’ பாடல் இடம்பெறும் என நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா’. செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் உலக அளவில் ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதது. இதையடுத்து கடந்த நவம்பர் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியானது. ஆனால், திரையரங்கில் இடம்பெற்ற ‘வராஹ ரூபம்’ பாடல் நீக்கப்பட்டு புதிய பாடல் இடம்பெற்றிருக்கிறது. பாடல் வரிகளை மாற்றாமல் வேறு ட்யூனை மாற்றி அமைத்திருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த 'வராஹ ரூபம்' பாடல், கேரளாவை சேர்ந்த பிரபல ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக் குழுவின் ‘நவரசம்’ என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கோழிக்கோடு செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இந்த வழக்கில், பாடல் காப்பி அடிக்கப்பட்டதற்கான உரிய ஆவணங்களை தய்க்குடம் பிரிட்ஜ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

இதனால், அந்தப் பாடலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கியது. தொடர்ந்து ‘வராஹ ரூபம்’ பாடல் எப்போது ஓடிடி தளத்தில் மீண்டும் எப்போது சேர்க்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடவுளின் ஆசியாலும், மக்களின் அன்பாலும் ‘வராஹ ரூபம்’ தொடர்பான வழக்கில் வெற்றி பெற்றுள்ளோம். மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு விரைவில் ஓடிடி தளத்தில் பாடலை மாற்ற உள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x