

“இப்போதெல்லாம் சிறிய இருமல் என்றாலும் கூட பெரிய செய்தியாகிவிடுகிறது” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில், ‘‘லேசான காய்ச்சல், சளி, இருமலுடன் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலம் தேறி வரும் அவர், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்" என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் கமல் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்பெல்லாம் பெரிய விபத்துகள் நேரும்போதும்கூட அடுத்து எப்போது ஷூட்டிங் என்று கேட்பார்கள். அடுத்த படம் எப்போது ரிலீஸ் என கேட்பார்கள். ஆனால், தற்போது சிறிய இருமல் என்றாலும்கூட, எனக்கு பெரிய செய்திகளெல்லாம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்தின் பெருக்கம். நான் நலமாக இருக்கிறேன். இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது” என்றார்.