சினிமாவில் புதுமைகள் நிகழ மிகப்பெரிய ஊக்கமாக இருப்பவர் கமல்ஹாசன்: விஜய் சேதுபதி

சினிமாவில் புதுமைகள் நிகழ மிகப்பெரிய ஊக்கமாக இருப்பவர் கமல்ஹாசன்: விஜய் சேதுபதி

Published on


சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு மிகப்பெரிய ஊக்கமாக இருப்பவர் கமல்ஹாசன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பொன்ராம், “விஜய் சேதுபதி மிகச்சிறந்த மனிதர். அவரால்தான் இந்தப்படம் சாத்தியமானது. படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும்படியாக, குடும்பத்தோடு ரசிக்கும்படியாக இருக்கும். படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முழு சுதந்திரம் தந்த தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களுக்கு நன்றி. படத்தில் அனைத்து கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளார்கள். படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என தெரிவித்தார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “நான் கமர்ஷியல் படங்களில் அதிகம் நடிப்பதில்லை. இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் நடிப்பேன் எனவும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. இப்படத்தில் என்னை முழுமையாக மாற்றிவிட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு மிகப்பெரிய ஊக்கமாக இருப்பவர் அவர். அவர் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் அவருக்கு எங்களின் நன்றி” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in