

பல நேரங்களில் இது யோக்கியமானது தான் என்பதை நிரூபிப்பது கொடுமையான விஷயம் என்று ‘இரவின் நிழல்’ படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “படம் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆனால், எனக்கு எதுவுமே அவ்வளவு சுலபமாக நடப்பதில்லை. அமேசானில் படம் வெளிவரும்போது யாருக்குமே தெரியவில்லை. எந்த ப்ரமோஷனும் இல்லை. திடீரென்று ஒரு நாள் வெளியாகியது. எந்த விளம்பரமும் இல்லை. மேலும் அதிலிருந்த கமெண்ட்ஸ் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அது மாறுவதற்கு 20 மணிநேரம் தேவைப்பட்டது. தற்போது இருக்கும் கமெண்ட்ஸூம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதுவும் கூட எனக்கு உடன்பாடில்லை. அதை மாற்ற முடியுமா என தெரியவில்லை.
பாலில் சொட்டு விஷம் போல, எதிர்மறையான விமர்சனங்கள் சீர்குலைத்து விடுகின்றன. அதை தவிர்க்க முடியாது. உலகம் முழுவதும் படம் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. விரைவில் இந்த படம் உலகம் முழுவதும் தெரியும். இது சிங்கிள் ஷாட்டா, நான் லீனியரா என்பதெல்லாம் இரண்டாவது தான். கன்டென்ட் உங்களை ஈர்க்க வேண்டும். இது சிங்கிள் ஷாட்; நான் லீனியர் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு.
பல நேரங்களில் இது யோக்கியமானது தான் என்பதை நிரூபிப்பது கொடுமையான விஷயம். எனக்கு இந்த சினிமாவைத்தவிர எதன் மேலும் ஈடுபாடில்லை. நான் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அடுத்து ஜனரஞ்சகமான ஒரு சினிமாவை குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கும் படத்தை எடுக்க இருக்கிறேன். இரவின் நிழல் படத்தின் மேக்கிங் வீடியோ விரைவில் வெளியாகும். இது சிரமமான ஒரு மேக்கிங். குற்றம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.