Published : 24 Nov 2016 12:06 PM
Last Updated : 24 Nov 2016 12:06 PM
'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார் கெளதம் மேனன்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கெளதம் மேனன். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணி இணைப்பில் 'துருவ நட்சத்திரம்' உருவாக இருக்கிறது. இப்படம் முதலில் சூர்யா நடிப்பதாக பூஜை போடப்பட்டது. அதற்குப் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது. இது குறித்து விசாரித்த போது, "உண்மை தான். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். உலகத் தரத்தில் இப்படத்தை உருவாக்க கெளதம் மேனன் திட்டமிட்டு இருக்கிறார். தற்போது படக்குழுவை இறுதி செய்யும் பணியில் இருக்கிறோம்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
"போர்ன்(Bourne)" சீரியஸ் படங்கள் வரிசையில் இப்படம் இருக்கும். இதில் விக்ரமோடு நடிக்க பிரபல இந்தி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் முழுமையாக அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது.
இப்படத்தை கெளதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டையின்மண்ட்' நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இதன் பணிகள் துவங்கப்படும். இயக்குநர் விஜய் சந்தர் படத்தில் நடித்த பிறகு, கெளதம் மேனன் படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார் விக்ரம்.
விரைவில் சூர்யாவை வைத்தும் ஒரு படம் இயக்க கெளதம் மேனன் திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT