

''என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன்'' என இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் சீனுராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு ஆச்சரிய பரிசு தர இதுநாள் வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு வாழ்த்து மடல் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஒரு கணவனுக்கு ஆச்சரியமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயபூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன்.
மேலும், அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார். உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே.. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன்
என் வாழ்நாளில் சிறப்பான நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள். நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன் அதுவும் தீடீரென்று.. என் காதலுக்குரியவர் அவருக்கு என் இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன். அன்பு நன்றி'' என தெரிவித்துள்ளார்.