தமிழக அளவிலான வசூலில் ‘விக்ரம்’ படத்தை முந்தி ‘பொன்னியின் செல்வன்’ முதலிடம்

தமிழக அளவிலான வசூலில் ‘விக்ரம்’ படத்தை முந்தி ‘பொன்னியின் செல்வன்’ முதலிடம்
Updated on
1 min read

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

பான் இந்தியா முறையில் உருவான இப்படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடுவதும், குறைவதுமாக இருந்த நிலையில், படம் முதல் வாரம் மட்டும் ரூ.308.59 கோடியை வசூலித்தது. இரண்டாவது வாரத்தின் 5 நாட்களையும் சேர்த்து படம் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. உலக அளவில் ரஜினியின் ‘2.O’ திரைப்படம் ரூ.750 கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பொன்னியின் செல்வன் முதல் வாரம் ரூ. 127.68 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முடிவில் படம் ரூ.181.11 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையாக கருதப்பட்ட 'விக்ரம்' படத்தின் ரூ.180 கோடி வசூல் சாதனை விஞ்சி பாக்ஸ் ஆபீஸில் பொன்னியின் செல்வன் முதலிடம் பிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in