Published : 11 Oct 2022 10:29 PM
Last Updated : 11 Oct 2022 10:29 PM

இளையராஜாவுடன் இசையிரவு 8 | ‘ராத்திரியில் பூத்திருக்கும்...’ - நெஞ்சினில் ஓடும் ஜீவநதி!

ஷாப்பிங் மால், காஃபி ஷாப், திரையரங்க வாசல்கள், கடற்கரையின் மணற்பரப்புகள், பேருந்து நிலையங்களில் நின்றிருக்கும் பேருந்து இருக்கைகள், சுற்றுலாத்தலங்களின் புல்வெளிகள், கல்விக் கூடங்களுக்கு செல்லும் வழிகளென திரும்பும் பக்கமெல்லாம் நிரம்பிக் கிடக்கிறது காதல். பூக்களுக்கே உரிய தனித்தனி நறுமணத்துடன் பூத்துச் சிரிக்கும் இந்த காதல் முழுக்கவே, வெவ்வேறு தனித்தன்மைகளைக் கொண்டவை என்றாலும், காதலிக்கப்படும் பெண் குறித்த புகழ்ச்சி மட்டும் எல்லா காதல்களிலும் பொதுவானதாகவே இருக்கிறது.

அழகை வர்ணிப்பது ஒரு கலை. அதுவும் காதலியின் அழகு குறித்து விவரிப்பது என்றால், அத்தனை காதலனும் கவிஞராகவும், ஓவியராகவும் அவதரிக்கும் அதிசயத்தை நேரடியாக காணமுடியும். இதற்கான விதை சங்க காலத்தில் இருந்தே தூவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலக்கியங்கள் தொடங்கி, சினிமா பாடல்கள் வரை பெரும்பாலானவை பெண்களின் அழகு குறித்த விவரிப்புகள்தான். அதிலும், திரைப்படப் பாடலாசிரியர்கள் பெண்ணை குறித்து எழுதும்போதெல்லாம் நாணத்தில் தலைக்கவிழந்த பேனாக்கள் ஏராளம்.

அந்தவகையில், இந்தப் பாடலும் காதலி குறித்த வர்ணனைதான். கடந்த 1983-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஜகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘தங்கமகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ' பாடல்தான். இந்தப் பாடலை மறைந்த மூத்த கவிஞர் ஐயா புலமைப்பித்தன் எழுதியிருப்பார். இரவு நேரங்களில், இளையராஜாவின் கிடாரும், புல்லாங்குழலும், வயலின்களும் இன்னிசை மழையாய் இந்தப் பாடலில் பூத்திருக்கும்.

பாடலின் தொடக்கத்தில் சிணுங்கும் கிடாரோடு, காதலியைத் தேடத் தொடங்கிவிடும் மனதை, பின்வரும் புல்லாங்குழலின் துணையோடு ஆரத்தழுவி அறுதல் அளித்திருப்பார் இளையராஜா. பின்னர் வயலின்களின் துணைக் கொண்டு அதற்றித் தேற்றும் மனது பாடல் வரிகளைக் கேட்கத் தொடங்கும்போது இலகுவாகிவிடும்.

"ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே

வீணையெனும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும்
மோதும் புதிய அனுபவம்

மாங்கனிகள் தொட்டிலிலே
தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற

வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை
நெஞ்சம் இன்னும் கொஞ்சம்
பொறுமை அவசியம்" என்று பாடலில் தனக்கு கிடைத்த இடங்களிலெல்லாம் அழகாக வர்ணித்திருப்பார் ஐயா புலமைப்பித்தன்.

பாடலின் முதல் சரணத்திற்கு முன், காதலன் காதலி பரிதவிப்பை, ஏக்கத்தை, அன்பை, வெளிப்படுத்தும் விதமாக வீணை, வயலின், கோரஸ், ட்ரம்ஸை வைத்து மனங்களை சுகமாக கனக்க வைக்கும் இளையராஜா, பின்வரும் புல்லாங்குழல் இசைக் கொண்டு அதே மனதை ஆற்றுப்படுத்தும் இடம் இருக்கிறதே அத்தனை அற்புதமானது. அதேபோலத்தான், இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையில், கிடார், வீணை, புல்லாங்குழல், கோரஸ், ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கும். கிடாரின் கேள்விகளுக்கு வீணை பதில் சொல்வது போலவும், புல்லாங்குழல் எழுப்பும் கேள்விக்கு கோரஸ் பதில் கூறுவதுபோலவும் இசையமைப்பது எல்லாம் ராகதேவனுக்கு மட்டுமே சாத்தியம்.

ஒரு காலக் கட்டம் வரை, பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இசைஞானி இளையராஜாவின் வருகைக்கு பின்னர்தான், பாடல் வரிகளைத் தாண்டி, இசைக்கருவிகள் எழுப்பும் ஒலிகளையும் சேர்த்தே பாடல் கேட்பவர்கள் அந்தப் பாடல் வரும்போதெல்லாம் படிக்கத் தொடங்கும் வழக்கம் உருவானது. பூக்கள் நாளை மீண்டும் பூக்கும்....

ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் இணைப்பு இங்கே

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x