அக்.14-ல் தமிழகத்தில் வெளியாகிறது சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’

அக்.14-ல் தமிழகத்தில் வெளியாகிறது சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’
Updated on
1 min read

சிரஞ்சீவி நடித்துள்ள 'காட்ஃபாதர்' படம் அக்டோபர் 14-ம் தேதி தமிழ்நாட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தெலுங்கிலும், பிறகு தமிழிலும் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரொடக்‌ஷன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள 'காட்ஃபாதர்' திரைப்படம் கடந்த அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உலகம் முழுக்க ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது. ஆனால், படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வரவேற்பும், அதற்கான திரையரங்குகளின் ஆக்கிரமிப்பும் காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஆந்திரா, தெலங்கானாவில் இந்தப் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14-ம் தேதி தமிழகத்திலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்தப் படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ்ப் பதிப்பும் வெளியாக இருக்கிறது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் 'காட்பாதர்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in