Published : 25 Sep 2022 02:20 PM
Last Updated : 25 Sep 2022 02:20 PM

நீங்கள் கொடுத்த பணம் பெரும் உதவி - தனுஷுக்கு நன்றி தெரிவித்த போண்டாமணி 

நடிகர் போண்டாமணி

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு, நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான 'தனிமை' படத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவ கோரி நடிகர் பெஞ்சமின் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ''அன்பு அண்ணன், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிகிச்சையில் உள்ள நடிகர் போண்டாமணியே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முழு செலவையும் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளித்துள்ளார். அவரைத்தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி ரூ.1லட்சம் கொடுத்து போண்டாமணிக்கு உதவியிருந்தார். அந்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம் என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார் போண்டா மணி. மேலும் வடிவேலு தன்னிடம் பேசியதில் தான் பாதி குணமடைந்துவிட்டதாகவும் கூறினார். வடிவேலு தன்னால் இயன்ற உதவியைச் செய்வேன் என்றும் உறுதியளித்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் போண்டா மணிக்கு ரூ.1லட்சம் கொடுத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள போண்டாமணி, ''வணக்கம் தம்பி தனுஷ். நீங்கள் கொடுத்த ரூ.1லட்சம் பணம் எனக்கு வந்து சேர்ந்தது. மிகவும் மகிழ்ச்சி. என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் அனுப்பிய பணம் எனக்கு இந்த நேரத்தில் மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்தச் சூழலில் நீங்கள் உதவுவது பெருமையாக உள்ளது. நன்றி'' என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x