மெட்ரோவுக்கு தொலைக்காட்சி தணிக்கையும் மறுப்பு: இயக்குநர் அதிருப்தி

மெட்ரோவுக்கு தொலைக்காட்சி தணிக்கையும் மறுப்பு: இயக்குநர் அதிருப்தி
Updated on
1 min read

'மெட்ரோ' படத்துக்கு தொலைக்காட்சி திரையிடலுக்கான தணிக்கையும் மறுக்கப்பட்டது குறித்து இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் காட்டமாக விளக்கமளித்தார்.

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெட்ரோ'. ஜோஹன் இசையமைத்த இப்படத்துக்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். மெட்ரோ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

இப்படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்த போது மறுக்கப்பட்டது. அதற்கு "வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. செயின் பறிப்பு சம்பவங்களை முன்வைத்து படமாக்கி இருக்கிறீர்கள். ஆனால், செயின் பறிப்பு முறைகளை சமூக விரோதிகள் கற்றுக் கொள்ளும் வகையில் காட்சிகள் இருக்கிறது. இதனை தணிக்கை செய்ய முடியாது" என்று தெரிவித்துவிட்டனர். தணிக்கை மறுப்பைத் தொடர்ந்து மறுதணிக்கைக்குச் சென்றது 'மெட்ரோ' படக்குழு. மறுதணிக்கையில் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கினார்கள். ஜூன் 24ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்றால், தொலைக்காட்சி திரையிடலுக்கு என சில காட்சிகளை நீக்கி தனியாக தணிக்கை செய்ய வேண்டும். அதுக்கும் தணிக்கை மறுக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனிடம் கேட்ட போது, "படம் வெளியான சில நாட்களிலேயே, 10 நிமிடக் காட்சிகளை நீக்கிவிட்டு தொலைக்காட்சி தணிக்கைக்கு விண்ணப்பித்தோம். காட்சிகளை நீக்கினாலும் இன்னும் செயின் பறிப்பு சம்பவங்கள், வன்முறை காட்சிகள் இருக்கிறது. இதனை தணிக்கை செய்ய முடியாது என மறுத்துவிட்டார்கள்.

தற்போது என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறேன். அவர்கள் கூறுவதைப் பார்த்தால் மொத்த செயின் பறிப்பு காட்சிகளை நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் படத்தின் மொத்த கதையுமே போய்விடும். இப்பிரச்சினையால் எனது அடுத்த படத்தைக் கூடத் தொடங்க முடியாமல் இருக்கிறேன்" என்று காட்டமாக தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in