

நடிகர் சூர்யா சினிமாவுக்கு வந்து 25 வருடம் ஆனதையடுத்து ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள் என ட்வீட் செய்துள்ளார்.
வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சூர்யா. இதில், விஜய், சிம்ரன், கவுசல்யா, ரகுவரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு தேவா இசை அமைத்திருந்தார். கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைதளங்களில், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் சூர்யா, “25 ஆண்டு கால திரைப் பயணம் உண்மையிலேயே அழகான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கிறது. கனவு காணுங்கள், அதை நம்புங்கள்” என்று தெரிவித்துள்ளார்.