“என்ன நடக்கிறது என்று யோசிக்கிறேன்” - விஜய் தேவரகொண்டா ட்வீட்

“என்ன நடக்கிறது என்று யோசிக்கிறேன்” - விஜய் தேவரகொண்டா ட்வீட்
Updated on
1 min read

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விஜய் தேவரகொண்டா மேசை மீது கால் வைத்து பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள படம், ‘லைகர்’. புரி ஜெகநாத் இயக்கியுள்ள இந்தப் படம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகிறது. ரம்யா கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படம், வரும் 25-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும், அனன்யா பாண்டேவும் பிஸியாக ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த 'லைகர்' பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், ''டாக்ஸிவாலா' படம் வெளியானபோது என்னால் உங்களிடம் எளிதாக பேச முடிந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை'' என்றார். அதைக்கேட்டதும் விஜய் தேவரகொண்டா அங்கிருந்த டேபிளின் மீது காலை வைத்து, 'ஃப்ரீயாக பேசுங்கள்'' என்றார். அவருடைய இந்த அணுகுமுறை சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு பலரும் இதனை மீம்களாக்கி வைரலாக்கினர்.

இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பான காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஜய் தேவரகொண்டா, அதில் ''தங்கள் துறைகளில் வளர முயற்சிக்கும் ஒவ்வொருவரின் முதுகுக்கு பின்னாலும் ஒரு இலக்கு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். நாம் அதனை எதிர்த்து போராட வேண்டும்.

உங்களுக்கு நீங்கள் நேர்மையாகவும், மற்றவர்களுக்கு சிறந்ததையும் விரும்பும்போது, மக்கள் மற்றும் கடவுளின் அன்பு உங்களைப் பாதுகாக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் இன்னொரு பதிவில் தனது புகைப்படத்தை பதிவிட்டு “என்ன நடக்கிறது என்று யோசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in