Published : 18 Aug 2022 03:30 AM
Last Updated : 18 Aug 2022 03:30 AM

“இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன்” - வதந்திகளுக்கு நடிகர் மாதவன் விளக்கம்

ராக்கெட்ரி படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் இயக்கியிருந்த படம் 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு'. மாதவன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், நம்பி நாராயணனாக அவரே நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மாதவன் அறிமுகமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஜூன் 1ம் தேதி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் தமிழ்ப் பதிப்பில் சூர்யாவும், இந்திப் பதிப்பில் ஷாருக்கானும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். வணிக ரீதியாக வும் இந்தப் படம் வெற்றி அடைந்தது.

இதனிடையே, 'ராக்கெட்ரி' படத்தை எடுப்பதற்காக மாதவன் தனது வீட்டை விற்றதாக பொய்யான தகவல்கள் வெளிவந்தன. இதனை மறுத்துள்ள மாதவன், "தயவு செய்து யாரும் என் தியாகத்தை அதிகமாக ஆதரிக்காதீர்கள். நான் எனது வீடு உள்ளிட்ட எதையும் இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரி படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுளின் அருளால் இந்தப் படத்தால் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, "எனக்கு சொந்தமாக ஒரு வீடு கிடையாது. இந்தியாவிலோ, துபாய்யிலோ நான் வாடகை வீட்டில் தான் தங்கியிருக்கிறேன். இந்தமுறை இந்தப் படத்துக்கு பிறகு ஒரு வீடு வாங்க வேண்டும் என எனது மனைவி என்னிடம் உறுதி வாங்கியுள்ளாள். ஏனென்றால், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை நாங்கள் வீடு மாற வேண்டியுள்ளது. எனவே, எனக்கு பணம் ஒரு விஷயம் கிடையாது. பணம் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும். இந்தக் கதையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்று 'ராக்கெட்ரி' படத்தின் புரோமோஷனின் போது மாதவன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x