

‘சீதா ராமம்’ படத்தின் ரிலீஸ் அன்று கண்ணீர்விட்டு அழுதேன் என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்துள்ள படம், சீதா ராமம். ஹனு ராகவபுடி இயக்கிய இந்த தெலுங்கு படம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில், தெலுங்கு ரசிகர்களுக்காக நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைத் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த ‘சீதா ராமம்’ கதையோடு இயக்குநர் ஹனு ராகவபுடியும் தயாரிப்பாளரும் என்னை அணுகியபோது, இந்தப் படம் தரமாக இருக்கும் என்று நம்பினேன். அது உறுதியாகி இருக்கிறது. திரைப்படம் என்பது பல கலைஞர்கள் மற்றும் திறமைகளின் கூட்டு முயற்சி. அனைவரின் பங்களிப்பாலும் இந்தப் படம் அழகானதாக மாறியது.
படத்தின் ரிலீஸ் அன்று நான் அழுதேன். படத்தைப் பார்த்தும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை நினைத்தும் வியந்தேன்.
ஹனு, மிருணாள் தாக்கூர், நடிகர் சுமந்த், இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர், பி.எஸ்.வினோத் மற்றும் என் மீதும் நீங்கள் காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.