Published : 08 Aug 2022 11:35 AM
Last Updated : 08 Aug 2022 11:35 AM

திரை விமர்சனம்: காட்டேரி

கிரண் (வைபவ்), அவரது மனைவி (சோனம் பாஜ்வா), நண்பர்கள் (கருணாகரன், ரவிமரியா, குட்டி கோபி) சேர்ந்து பணத்துக்காக, உளவியல் ஆலோசகரான காமினியை (ஆத்மிகா) கடத்துகின்றனர்.

தங்களது நண்பனான மாங்கா மணி, தங்கப் புதையல் தேடி ஒரு கிராமத்துக்கு சென்றிருப்பது, காமினிமூலம் தெரியவர, அந்த புதையலை அடைய இவர்களும் அங்கு செல்கின்றனர்.

அங்கு எதிர்கொள்ளும் அமானுஷ்யஅனுபவங்கள் குலைநடுங்க வைக்கின்றன. அது பேய்கள் வசிக்கும் கிராமம்என்று தெரிந்து, தப்பிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் தப்பினரா? பேய்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? ஆகிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘காட்டேரி’ படம்.

‘அடல்ட்’ வசன நகைச்சுவையைக் கொண்டு, சிரிக்கவும், பயமுறுத்தவும் முயன்றிருக்கிறார் இயக்குநர் டீகே. ஆனால், அது கைகூடவில்லை. குழந்தைகளை அழைத்துவந்த பெற்றோர் சங்கடமாக நெளிகின்றனர். இதைத் தாண்டி பல நகைச்சுவை தருணங்கள் தர்க்கத்தை மறந்து சிரிக்க வைக்கின்றன.

முதல் பாதி திரைக்கதை, அதில் உள்ளதிருப்பங்களில் புதுமையோ, சுவாரஸ்யமோ இல்லை. இரண்டாம் பாதியில், பிரதான பேயின் பின்னணியை விவரிக்கும் முன்கதைக்கு முந்தைய பில்டப் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.

பேய் கதை சொல்லத் தொடங்கும் முன்பு,‘‘நான் சொல்கிற கதையில் எது உண்மை, எது பொய் என்று கண்டுபிடித்தால் உங்களை விட்டுவிடுகிறேன்’’ என்று சொல்வது, படத்தின் எஞ்சிய பகுதி சுவாரஸ்யமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

அதேபோல, 60-களில் நடக்கும் அந்த முன்கதை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், முன்கதை முடிந்ததும், உண்மை எது, பொய் எது என கண்டுபிடிக்கும் ‘டாஸ்க்’கை மறந்து திரைக்கதை வேறு திசைக்குள் புகுந்துவிடுவது ஏமாற்றம்!

கொடுத்த வேலையை செய்திருக்கிறார் வைபவ். அவரது நண்பர் கஜாவாக வரும் கருணாகரனின் நாகரிகமான நக்கல்கள் நச்! பேயை அடக்கும் சாமியாராக வரும் பொன்னம்பலம் ரசிக்க வைக்கிறார். சோனம் பாஜ்வா,ஆத்மிகாவின் கதாபாத்திரங்களில் இருக்கும் மர்மத் தன்மை ரசிக்க வைக்கிறது. ஃபிளாஷ்பேக்கில் மாதம்மாகதாபாத்திரத்தில் வரலட்சுமி கச்சிதம்.

இசையில் குறிப்பிட்டு சொல்ல எதுவும்இல்லை. இரவுக் காட்சிகள், ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்கு தேவைப்படும் ஒளியமைப்பு, வண்ணத்தை கலந்து கொடுத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவின் உழைப்பு அபாரம்!

முன்கதையை வலுவாக அமைத்த இயக்குநர், அதை நோக்கிப் பயணிக்கும் நிகழ்கதையை வலுவாக்காமல், அவலைநினைத்து வெற்று உரலை இடித்திருக்கிறார். இதனால், கூர்மையற்ற கோடாரியாக நம்மை பதம் பார்க்கிறது ‘காட்டேரி’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x