Published : 04 Oct 2016 03:16 PM
Last Updated : 04 Oct 2016 03:16 PM
'பவர் பாண்டி' படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு செல்வராகவனின் பாராட்டால் தனுஷ் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் 'பவர் பாண்டி' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் தனுஷ். வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தின் கதைக்களம் அதிரடிக் காட்சி கலைஞர் (ஸ்டண்ட்மேன்) ஒருவரைப் பற்றிய கதையாகும். இக்கதையில் ராஜ்கிரணின் சிறுவயது பாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் தனுஷ். மேலும், கெளதம் மேனனும் கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருடைய காட்சிகளை சென்னையில் காட்சிப்படுத்தி இருக்கிறார் தனுஷ். மேலும், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தேனியில் நடத்தி வருகிறது படக்குழு.
இப்படத்தின் சென்னை படப்பிடிப்பு காட்சிகளை எடிட்டிங் முடித்து செல்வராகவனுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்.
அதனைப் பார்த்துவிட்டு "'பவர் பாண்டி' காட்சிகளைப் பார்த்து அசந்து போய்விட்டேன். ரொம்ப வேடிக்கையாகவும், மாயாஜாலமாகவும் நெகிழ்வூட்டும் விதத்திலும் இருந்தன. தனுஷ் மற்றும் ராஜ்கிரண் இருவரையும் பற்றிப் பெருமைப்படுகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
இதற்கு தனுஷ் "ரொம்ப நன்றி செல்வா. ரொம்ப சந்தோஷமாகவும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது. எல்லாப் புகழும் உங்களுக்கே" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT