Published : 07 Aug 2022 07:28 PM
Last Updated : 07 Aug 2022 07:28 PM

6 வருடமாக திருமணம் செய்துகொள்ள சொல்லி துன்புறுத்தும் இளைஞர் - நித்யா மேனன்

6 வருடமாக தன்னை ஒரு இளைஞர் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி துன்புறுத்தியதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

நித்யா மேனன், விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான படம் '19(1)a'. இந்தப் படத்தையொட்டி நடைப்பெற்ற சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை 6 வருடமாக ஒரு இளைஞர் திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அந்த பேட்டியில், ''அவர் என்ன சொன்னாலும் நம்புபவர்கள் தான் உண்மையான முட்டாள்கள். அவர் என்னை நீண்ட நாட்களாக தொந்தரவு செய்து வருகிறார். அவர் வைரலான பிறகு என்னைப் பற்றி பகிரங்கமாக பேச ஆரம்பித்தார். ஆறு வருடங்களுக்கும் மேலாக அவர் என்னை தொந்தரவு செய்தார். காவல் துறையில் புகார் அளிக்குமாறு பலரும் என்னிடம் கூறியபோதும் நான் பொறுமைக் காட்டினேன். அவர் என் பெற்றோரை தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்தார்.

இறுதியாக பொறுமையிழந்த அவர்கள் குரலை உயர்த்த ஆரம்பித்தனர். என் அம்மா கேன்சரில் இருந்து மீண்டு வந்த போதும் கூட அவர் எனக்கு போன் செய்தார். பொதுவாக சாந்தமாகவும் அமைதியாகவும் இருக்கும் அப்பாவும் அம்மாவும் அவரிடம் கோபமாகப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர் நம்பரை ப்ளாக் செய்ய சொன்னேன். கிட்டத்தட்ட முப்பது தொலைபேசி எண்களை நான் ப்ளாக் செய்தேன் ”என்று நித்யா ஒரு நேர்காணலில் கூறினார். அவரை தொந்தரவு செய்தவர் திரைப்பட விமர்சகர் சந்தோஷ் வர்கி என்பது தெரியவந்துள்ளது.

நித்யா மேனன் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள சந்தோஷ் வர்க்கி, ''30க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து அழைத்து சித்ரவதை செய்ததாக அவர் கூறினார். ஆனால், ஒரு நபர் தனது பெயரில் எத்தனை சிம்கார்டுகளை வாங்க முடியும் என்பதை மக்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி நித்யா மேனனனுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்திருப்பதாக அவரது தாயார் கூறினார். யாருடனும் நிச்சயதார்த்தம் செய்யவில்லை என்று அவளின் தந்தை என்னிடம் கூறினார். அவர்கள் பலவிதமாக பேசியதால் நான் மிகவும் குழப்பமடைந்தேன் என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு எந்த விஷயத்திலும் நான் தலையிடுவதில்லை. இது எனக்குத் தெரிந்திருந்தால், நான் அவரைக் காதலித்து பின்தொடர்ந்திருக்க மாட்டேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x