

பணத்தைப் பற்றிய ஒரு பயணம் தான் 'ரூபாய்' என்று படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த், கிஷோர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரூபாய்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை அன்பழகன் இயக்கி இருக்கிறார். பிரபு சாலமன் தயாரித்திருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் அன்பழகனிடம் கேட்ட போது, "’சாட்டை’ எனது முதல் படம். இதுவும் எனது முதல் படம் தான். ஏனென்றால் அதுவேறு கதை களம், இதுவேறு கதை களம்.
பணத்தாசை தான் எல்லா தீமைகளுக்கும் ஆணி வேர். தேனியில் லாரி டிரைவராக இருக்கும் பரணி – பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு லாரி மட்டும் தான். அந்த லாரிக்கு பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக கோயம்பேடு மார்கெட் வருகிறார்கள்.
ஊர் திரும்பும் போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்கு போனார்களா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
பணம் நிம்மதி தராது என்று எந்த ஒரு ஏழையும் சொல்வதில்லை. நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்த பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை. இப்படி எல்லோரது வாழ்க்கையிலும் இன்றியமையாகிப் போன பணத்தைப் பற்றிய ஒரு பயணம் தான் இந்த 'ரூபாய்'. இதில் காமெடி, காதல் கலந்து உருவாக்கி உள்ளோம். படப்பிடிப்பு சென்னை, மூனார், மறையூர், தேனி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது" என்று தெரிவித்தார் அன்பழகன்.