'ரஹ்மான் இசைப்பள்ளியில் சேர்க்க உறுதி' - இசைக்கலைஞர் திருமூர்த்தியை நெகிழவைத்த கமல்ஹாசன்

'ரஹ்மான் இசைப்பள்ளியில் சேர்க்க உறுதி' - இசைக்கலைஞர் திருமூர்த்தியை நெகிழவைத்த கமல்ஹாசன்
Updated on
1 min read

பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி இசைக்கலைஞர் திருமூர்த்தியை ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் தனது சொந்த செலவில் சேர்த்துவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனே எழுதி பாடிய 'பத்தல பத்தல' பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. தமிழில் மட்டும் இந்தப் பாடலை யூடியூப்பில் 6 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார். அப்போது திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் எனவும் கமல் அறிவித்துள்ளார். முன்னதாக, இதனை அந்த திருமூர்த்தியின் சந்திப்பில் இதைச் சொல்லி அவரை சந்தோஷப்படுத்தியதுடன் அவரை வாழ்த்தியும் அனுப்பினார் கமல்ஹாசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in