

சென்னை: திருப்பதி கோயில் மாடவீதியில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காலணியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர்.
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. பின்னர், இருவரும் திருப்பதி சென்று வழிபட்டனர். அங்கு மாடவீதியில் நயன்தாரா காலணி அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
இந்நிலையில், மன்னிப்பு கோரி தேவஸ்தானத்துக்கு விக்னேஷ் சிவன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருமணம் முடிந்ததும், மண்டபத்தில் இருந்து நேரடியாக திருப்பதி வந்தோம். சிறப்பான தரிசனம் கிடைத்தது. அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அப்பகுதியில் இருந்து வெளியே வந்துவிட்டு, சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் வந்தோம். அந்த அவசரத்தில், காலணி அணிந்திருப்பதை அறியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு அவமரியாதை செய்ய நினைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.