Published : 11 Jun 2022 06:34 PM
Last Updated : 11 Jun 2022 06:34 PM

“ஆற்றல் மிக்க மக்கள் முதல்வருக்கு நன்றிகள்” - இல்லத் திருமண விழாவுக்கு வந்த ஸ்டாலினுக்காக ரஹ்மான் ட்வீட்

''எங்கள் இல்லத் திருமண விழாவைச் சிறப்பித்தமைக்கு ஆற்றல் மிக்க தமிழ்நாட்டின் மக்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!'' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், ரியாஸ்தீன் சேக்கிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் முன்னிலையில், இருவருக்கும் கடந்த மாதம் 5-ம் தேதி மாலை சென்னையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. பிரபலங்கள் யாரும் அழைக்கப்படாதநிலையில், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைத்து நடத்துவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஏ.ஆர்.ஆர் ரகுமானின் மகள், கதீஜா - ரியாஸ்தீனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுமணத் தம்பதிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். எல்லைகள் மற்றும் தடைகளைத் தாண்டி, தனது ஆத்மார்த்தமான இசையால் மேலும் பல இதயங்களைக் ஒன்றிணைக்க அன்பான ஏ.ஆர். ரகுமானை வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தங்கள் துணைவியாருடனும், மருமகளுடனும் வருகை புரிந்து அன்பு மணமக்களை வாழ்த்தி எங்கள் இல்லத் திருமண விழாவைச் சிறப்பித்தமைக்கு ஆற்றல் மிக்க தமிழ்நாட்டின் மக்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x