குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் - நடிகர் அஜித்

குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் - நடிகர் அஜித்
Updated on
1 min read

குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக அஜித்குமார் சார்பில் அவரது மேலாளர் பதிவிட்டுள்ள ட்விட்டர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்குமார் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கோ, அல்லது இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்துவருகிறார். அவரது அறிக்கைகளும், அவரது கருத்துகளும், அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவின் ட்விட்டர் பக்கம் மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அஜித்தின் பெயரில் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

இது தொடர்பாக சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கழுதையுடன் ஒரு தம்பதி செல்லும் விதமாகவும், அப்போது அவர்கள் சந்திக்கும் விமர்சனங்களை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'நாம் எதை செய்தாலும், அதை விமர்சிப்பவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நம் விருப்பத்துக்கு ஏற்ப வாழவேண்டும்' என்ற நீதியை உணர்த்தும் வகையில் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. இந்த புகைப்படத்துக்கு கேப்ஷனாக, 'இந்த குட்டி கதை, யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்காக.. அன்புடன் அஜித்' என பதிவிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in