Published : 24 May 2022 05:48 AM
Last Updated : 24 May 2022 05:48 AM

சினிமா தயாரிப்பாளர் ஏக்நாத் காலமானார்

சென்னை: திரைப்படத் தயாரிப்பாளரும், வீடியோ நிறுவன உரிமையாளருமான ஏக்நாத் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

சென்னையில் வீடியோ கேசட் நிறுவனம் நடத்தி வந்தவர் ஏக்நாத். பல திரைப்படங்களின் வீடியோ உரிமையை பெற்று, கேசட்களை வெளியிட்டு வந்தார். ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். கே.பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’, ராம்கி நடித்த ‘வெள்ளையத்தேவன்’, கஸ்தூரி ராஜா இயக்கிய ‘மெளன மொழி’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது தயாரிப்பில் வந்தவை. கமல்ஹாசனின் ‘இந்திரன் சந்திரன்’ உட்பட பல படங்களை மொழி மாற்றம் செய்தும் வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்த ஏக்நாத்துக்கு, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22-ம் தேதி இரவு காலமானார். மறைந்த ஏக்நாத்துக்கு கவுரி என்ற மனைவி, சுரேஷ் என்ற மகன், அனுராதா என்ற மகள் உள்ளனர். மகள் அனுராதா, அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு, 25-ம் தேதி (நாளை) இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. ஏக்நாத் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x