Published : 22 May 2022 05:36 PM
Last Updated : 22 May 2022 05:36 PM

'நான் சொன்னதும் ஓகே சொல்லிவிட்டார்' - டிமான்டி காலனி 2-க்காக இணைந்த அருள்நிதி, அஜய்ஞானமுத்து 

நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும், 'டிமான்டி காலனி' இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளனர்.

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'டிமான்டி காலனி'. த்ரில்லர் படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, 'இமைக்கா நொடிகள்' மற்றும் விரைவில் வரவிருக்கும் 'கோப்ரா' போன்ற பெரிய படங்களின் மூலம் இப்போது முதன்மையான திரைப்பட இயக்குனர்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில், ''டிமான்டி காலனி திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று, அதுமட்டுமல்லாமல், படத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் இதயத்திற்கும் நெருக்கமானதும் கூட. பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் 'டிமான்டி காலனி 2' பற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தகைய ஊக்கங்களும் நேர்மறையான வார்த்தைகளும் திரைக்கதையை வடிவமைக்க என்னைத் தூண்டின. அருள்நிதியை அணுகியபோது, ​​அவருக்கும் திரைக்கதை பிடித்திருந்தது, உடனே நாங்கள் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். திதைத்துறையில் அவரது வளர்ச்சி இப்போது அதிகரித்திருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் இந்த படத்தில் அவர் இருப்பது ஒரு ரசிகர் கூட்டத்தை இழுக்கும் முக்கிய காரணியாக இருக்கும். என்னை நம்பி எனது இயக்குநர் பாதையை தொடங்கி வைத்த அருள்நிதி மீண்டும் என்னை நம்பி தயாரிப்பாளராக என்னை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தெளிவான உத்வேகத்துடன், டிமான்டி காலனியை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம், இது இனி அடுத்தடுத்த பாகங்களைக் கொண்டிருக்கும். ஜூலை 2022 க்குள் டிமான்டி காலனி 2 இன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். தற்போது, ​​முன்னணி கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதன்படி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x