

ரஜினியின் வீட்டுக்கு தான் சென்றிருந்தபோது அவருடைய எளிமையைப் பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.
ரஜினியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசிய புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார் எழுத்தாளர் பாலகுமாரன். ஆனால், ரஜினியை எதற்காக சந்தித்தார் என்பது உள்ளிட்ட விஷயங்களை அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிடவில்லை.
தற்போது, ரஜினியை சந்தித்தபோது அவருடைய எளிமைப் பற்றி தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார் பாலகுமாரன். இது குறித்து அவர் கூறியிருப்பது:
"மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸடார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி, வாழ்வு தந்திரம் உண்டென்றாலும இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது.
என் காது சமீபமாய் மந்தித்திருக்கிறது. ஆயினும் எங்களுடைய பதினைந்து நிமிடப் பேச்சில் அன்பும் அக்கறையும் இருந்தன.
அந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இன்னோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்தாங்கினார். என் புத்தகங்கள் தந்தேன. மனம் பலமாய் நலமாய் இருப்பது சொன்னேன். தன் நலன் பற்றியும் பேசினார்
நான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்