

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019-ல் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், கே.பாக்யராஜ், நாசர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன.
இதில், தலைவராக நாசர், பொதுச் செயலராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்டோர் வெற்றி பெற்று, கடந்த மார்ச் மாதம் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்றுநடைபெற்றது. இதில், பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நாசர், விஷால், கார்த்தி, துணைத் தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்ட, பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றுள்ளோம்.
இன்னும் 40 சதவீத கட்டிடப்பணிகள் முடிவடைய வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை. எனவே, வங்கிக் கடன் பெற்று, கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளோம். அதேபோல, நடிகர், நடிகைகளிடமுடம் நிதி திரட்ட உள்ளோம். இன்னும் 3 மாதங்களுக்குள் கட்டிட வேலையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்.
தாதா சாகேப் விருது பெற்ற ரஜினிகாந்துக்கும், பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகிக்கும் பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவித்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.