

இயக்குநர் ராம், நிவின் பாலி, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளன.
'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராமுடன், 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி இணையும் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், புரொடக்ஷன் நம்பர் -7 ஆக இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்..
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.
சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் மிகப் பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்றுள்ளது, விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்படவுள்ளன.