Last Updated : 30 Apr, 2016 03:07 PM

 

Published : 30 Apr 2016 03:07 PM
Last Updated : 30 Apr 2016 03:07 PM

ரூ.3 கோடி செலவு; ரூ.3 லட்சம் வரவு: டெல்லி கணேஷ் குமுறல்

"சம்பாத்தியமே இல்லாமல் ரூ.3 கோடி போட்டுட்டு ரூ.3 லட்சம் சம்பாதித்தால் என்ன முடிவெடுக்க முடியும்" என்று டெல்லி கணேஷ் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி கணேஷ் தயாரிப்பில் அவருடைய மகன் மகா, வின்சென்ட் அசோகன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 22ம் தேதி வெளியான படம் 'என்னுள் ஆயிரம்'. இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் டெல்லி கணேஷ் தனது படத்திற்கு நிலவிய பிரச்சினை என்ன என்பதை வாட்ஸ்-அப் பேசி நண்பர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்.

அதில் டெல்லி கணேஷ் பேசியிருப்பது, "’என்னுள் ஆயிரம்’ என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் பண்ணிட்ட ஒரு தயாரிப்பாளர் நான். ரொம்ப சிரமம். யாருமே மதிக்க மாட்டேங்கறாங்க. ஒரு இந்தி படம், தெலுங்கு படம், ஆங்கில கார்ட்டூன் படம் இதுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்றெல்லாம் சொல்றாங்க.. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் படத்திற்கு ஒரு ஷோ கொடுக்க மாட்டேங்கறாங்க.

அந்த இந்திப் படத்தையும், ஆங்கில படத்தையும் மதியம் 1 மணிக்கு போட்டால் ஒன்றும் குடிமுழுகி போகப் போறதில்லை.. பார்ப்பார்கள். ஆனால், நம்ம படத்தை மதியம் 1 மணிக்குப் போட்டால் ஒரு பய வரமாட்டேங்கறான். 3 மணி ஷோ இல்லையா சார், 6 மணி ஷோ இல்லையா சார் அப்படினு கேக்கறாங்க. அது ரொம்ப மோசம்.

திருச்சியில் எல்லாம் என் படம் ரிலீஸாகவே இல்லை. கோயம்புத்தூரில் கொடுத்திருக்கும் தியேட்டர் எங்கேயோ ஒரு ஓரத்தில் இருக்கிறது. திருநெல்வேலியில் ஒரு ஷோ கூட எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் தியேட்டரில் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஏ.சி. கூட கிடையாது. 'உங்களுக்காக தான் போனேன் சார்.. இல்லையென்றால் மனுஷன் போக மாட்டான்' என்கிறார்கள். ஒன்றரை மணிக்கு வருகிற படங்களுக்கு வாசலில் ப்ளாக்கில் டிக்கெட் விற்கும் பையன் என்ன சொல்கிறான் என்றால் "இதெல்லாம் உப்புமா கம்பெனி என்று சொல்வார்கள்.. நார்மலா" என்கிறான்.

3 கோடி ரூபாய் போட்டு நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படமெடுத்தால், ஒன்றரை மணிக்கு ரிலீஸானால் உப்புமா கம்பெனி என்று சொல்வார்களாம். யார் சொல்றா.. ப்ளாக்ல டிக்கெட் விற்கிறவன் சொல்றான். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கிறது. நமக்குத் தான் ஒண்ணும் தெரிய மாட்டங்குது. யாரும் சொல்லவும் மாட்டேன்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட போய் கேட்கிறது?

தியேட்டர் கிடைக்கல.. 1ம் தேதி வந்தால், ஐயோ வந்திராதீங்க.. 8ம் தேதி வந்தால் நிறைய படம் வருகிறது, பக்கத்திலேயே வந்திராதீங்க. 14ம் தேதி அய்யோ ’தெறி’ வருது.. 22ம் தேதி, ம்ம்ம் பார்க்கலாம். ’தெறி’ எப்படி போனாலும் உங்களுக்கு வரும் கூட்டம் வரும் என்று ஆரம்பித்து, இப்ப, 'நீங்க 29 வந்திருக்க வேண்டும் சார். ஏன் 22 வந்தீங்க?' என்று கேட்கிறார்கள்.

மொத்தத்துலே என்னமோ பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிடறாங்க. சரி போகட்டும். ஒரு படம் எடுத்து நிறைய கற்றுக் கொண்டேன். இத்தனை வருடங்களில் கற்றுக் கொள்ளாதது எல்லாம் இப்போது கற்றுக் கொண்டேன். நண்பரும் பகை போல் தெரியும், அது நாட்பட நாட்பட புரியும் அப்படிங்கிற பாட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.

எல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும் என்று தெரியாதபடி, என்ன கொஞ்சம் சம்பாதித்தால் முடிவெடுக்க உட்காரலாம். சம்பாத்தியமே இல்லாமல் 3 கோடி போட்டுட்டு 3 லட்சம் சம்பாதித்தால் என்ன முடிவெடுக்க வருவான். பார்ப்போம். ஆவண செய்வோம்." என்று அந்த ஆடியோ பதிவில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x