Published : 22 Mar 2022 08:27 PM
Last Updated : 22 Mar 2022 08:27 PM

'எனக்கும் பொண்ணு இருக்காங்க, அப்படி படம் எடுக்கமாட்டேன்' - 'மன்மதலீலை' குறித்து வெங்கட் பிரபு

'மன்மதலீலை' பட விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, 100 நாள்களை கடந்து 100 கோடியை வசூலித்தது.

'மாநாடு' படத்துக்கு பிறகு ‘மன்மதலீலை’ என்று தலைப்பிடப்பட்ட படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வெங்கட் பிரபு, "எனது உதவியாளர் மணிவண்ணனின் கதைதான் இது. கரோனா காலத்தில் எதாவது வித்தியாசமாக செய்யலாம் என நினைத்தபோது அசோக்கை சந்தித்து இந்தக் கதையை சொன்னேன். மற்றவர்கள் நினைப்பது போல் இது கில்மா படம் கிடையாது. பேச வேண்டிய விஷயங்களை நாகரிகமாக பேசியுள்ளோம்.

முகம் சுழிக்க வைக்கக் கூடிய இரட்டை அர்த்தங்களோ, வசனங்களோ கிடையாது. இந்த மாதிரியான ஒரு குடும்பத்தில் இருந்து வந்து அது மாதிரியான படங்களை எடுக்க மாட்டேன். எனக்கும் இரண்டு பொண்ணுங்க இருக்காங்க. நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கியுள்ளோம்" என்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x