பாலா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா?

பாலா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா?
Updated on
1 min read

பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா - ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்குப் பிறகு பாலா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரது படங்களில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. இதில் பாலா இயக்கவுள்ள படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதில் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரம் ஒன்றாகும். இதற்கான பயிற்சியில் தற்போது இருக்கிறார் சூர்யா. மேலும், இந்தப் படத்தில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனைப் படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது. விரைவில் சென்னையில் படபூஜை நடைபெறவுள்ளது.

கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் தான் சூர்யா - ஜோதிகா ஜோடி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in