'மாற்றத்துக்கு தயாராக இருங்கள்' - ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த சூர்யா
சென்னை: "மாற்றத்துக்கு தயாராக இருங்கள்" என்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'எதற்கும் துணிந்தவன்'. வரும் 10-ம் தேதி ரிலீஸாக உள்ள இந்தத் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, நிறையை விஷயங்கள் குறித்து பேசினார்.
சூர்யா தனது பேச்சில், "எனது செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும், அது உங்களின் நலனுக்காகத் தான் இருக்கும். அதேபோல் திரைப்படமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து தான் செயல்பட்டு வருகிறோம்.
அதன்படி, ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் யாரும் பேசத் துணியாத விஷயத்தை சொல்லியிருக்கிறோம். 'ஜெய்பீம்' படத்தின்போது சிலருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டன. அது தற்காலிக பிரச்சினை. அதனை சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனது ரசிகர்களுக்கும் அப்போது பிரச்சினைகள் உண்டாகின.
ஆனால், அதை அவர்கள் பக்குவமாக கையாண்டார்கள். அதற்காக அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். இழப்பதற்கு தயாராக இருந்தால்தான் அடைவதற்கு நிறைய இருக்கும். எனவே, மாற்றத்துக்கு தயாராக இருங்கள்" என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
