’நாங்கள் எதுவும் திட்டமிடவில்லை’ - ரஜினியுடன் மீண்டும் இணைவது குறித்து கார்த்திக் சுப்பராஜ்

’நாங்கள் எதுவும் திட்டமிடவில்லை’ - ரஜினியுடன் மீண்டும் இணைவது குறித்து கார்த்திக் சுப்பராஜ்
Updated on
1 min read

ரஜினியை மீண்டும் இயக்கப்போவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதற்கான ஸ்பெஷல் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ‘பீஸ்ட்’ படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் ’ரஜினி 169’ படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ரஜினி நடிக்கும் ஒரு படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார் என்றும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தன. அத்தகவல்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர், ”ரஜினியை வைத்து நான் இயக்கப்போவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் தற்போது அவரை வைத்து எந்தப் படத்தையும் இயக்கவில்லை. அதற்காக நாங்கள் திட்டமிடவும் இல்லை. ‘மகான்’ இப்போதுதான் வெளியாகியுள்ளது. விரைவில் என்னுடைய அடுத்த படம் குறித்து அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in