ஓடிடியில் வெளியாகிறதா ‘பொன்னியின் செல்வன்’? - படக்குழுவினர் மறுப்பு

ஓடிடியில் வெளியாகிறதா ‘பொன்னியின் செல்வன்’? - படக்குழுவினர் மறுப்பு
Updated on
1 min read

ஓடிடியில் ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகவுள்ளதாக வெளியான செய்திக்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகம் வெளியீட்டுக்குப் பிறகு, இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதனிடையே, சமூக வலைதளத்தில் முன்னணி ஓடிடி நிறுவனம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைப் பலரும் ஆச்சரியமாகப் பகிரத் தொடங்கினார்கள்.

இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் “திரையரங்க வெளியீட்டுக்காகவே ‘பொன்னியின் செல்வன்’ தயாராகி வருகிறது. ஓடிடியில் நேரடி வெளியீடு குறித்த தகவல்கள் அனைத்துமே வதந்தி தான். பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ளோம்.

இந்தப் பிரம்மாண்டத்தைத் திரையரங்கில் மக்கள் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்றே நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்கள்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு. ஜூலையில் வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in