

நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’ அணி வெற்றி பெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த போட்டியை தொடங்கி வைத்தனர்.
இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி சினிமா நட்சத்திரங்களான பிரபு, விக்ரம், கார்த்திக், ஜெயராம், சத்யராஜ், கவுண்டமணி, தனுஷ், நடிகைகள் சுஹாசினி, ஸ்ரேயா. தப்ஸி, கார்த்திகா, நமிதா, பிந்து மாதவி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ்த் திரையுலகைத் தவிர மற்ற தென்னிந்திய நட்சத்திரங்களான மம்முட்டி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டன.
இதில் சூர்யா தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’, விஜய் சேதுபதி தலைமையிலான ‘ராம்நாட் ரைனோஸ்', ஜீவா தலைமையிலான ‘தஞ்சை வாரியர்ஸ்’ ஆர்யா தலைமையிலான 'சேலம் சீட்டாஸ்' ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அதில் சூர்யா தலைமையிலான சென்னை அணியும், ஜீவா தலைமையிலான தஞ்சை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியை நடிகர் மம்முட்டி தொடங்கி வைத்தார்.
காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்ற அனைத்து போட்டிகளும் 5 ஓவர்கள் கொண்டதாகவும், இறுதிப் போட்டி 6 ஓவர்களைக் கொண்டதாகவும் அமைந்தது. இறுதிப் போட்டியில் முதலில் விளை யாடிய தஞ்சை வாரியார்ஸ் அணி 6 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்தது. அதை அடுத்து களம் இறங்கிய சென்னை சிங்கம்ஸ் அணி 84 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கலந்துகொள்ளாதவர்கள்
நடிகர் சங்கத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு உள்ளிட்ட எதிரணியினர் பலரும் கலந்து கொள்ளவில்லை. சரத்குமார் அணியில் இருந்து நடிகர் விஜயகுமார் மட்டும் கலந்துகொண்டார். அதேபோல தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் கலந்துகொள்ளவில்லை.