

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவை ஏற்படுத்த முடியும் என யாராவது சவால் விட தயாரா? என விஷால் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் மார்ச் 20ம் தேதி சென்னையில் நடைபெற்றது. நடிகர் சங்கத்தைப் பாண்டவர் அணி கைப்பற்றுவதற்கு அதிகமாக உழைத்தவர் ஜே.கே.ரித்திஷ் என்றும் அவரை பொதுக்குழு கூட்டத்தில் மேடையேற்றவில்லை என்றும் அவருடைய ஆதரவாளர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இப்பொதுக்குழு கூட்டத்தில் வடிவேலு மட்டும் மேடையேறி உரையாற்றினார் என்றும் இதற்கெல்லாம் காரணம் துணைத்தலைவர் பொன்வண்ணன் தான் என்றும் தகவல் வெளியானது.
இப்பிரச்சினைகளைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இப்பிரச்சினை குறித்து தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் "நடிகர் சங்கத்தில் பிளவா? அதில் பிளவை ஏற்படுத்த முடியும் என யாராவது சவால் விட தயாரா? இந்த அணி வலுவானது. உறுதி குறையாமல் நடிகர் சங்க உறுப்பினர்களுக்காகவும், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக செயல்படுவோம்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.