

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு வில்லனாக ஜெகபதி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தை இயக்க இருக்கிறார் இயக்குநர் பரதன். ஏற்கனவே 'கில்லி', 'வீரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார் பரதன். மேலும், விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' படத்தையும் இயக்கி இருக்கிறார்.
விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பை மே முதல் வாரம் முதல் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் எடிட்டராக ப்ரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தற்போது இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெகபதி பாபு. ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்திற்குப் பிறகு இப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெகபதி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு தேர்விற்கான இடங்கள் மற்றும் ஆடை வடிவமைப்பு பணிகள் ஆகியவை தற்போது நடைபெற்று வருகிறது.
> முந்தைய அப்டேட்: ’>தெறி' அப்டேட்ஸ்: 7 பாடல்களும் பின்னணி தகவலும்