விக்ரமை புகழ்ந்து விவேக் கருத்து: திரையுலகினர் ஆதரவு

விக்ரமை புகழ்ந்து விவேக் கருத்து: திரையுலகினர் ஆதரவு
Updated on
1 min read

விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து விவேக் கூறியுள்ள கருத்திற்கு பல்வேறு திரையுலகினர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 2015ம் ஆண்டு வெளியான படம் 'ஐ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்திற்காக விக்ரம் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருந்தார். இப்படத்தின் பாத்திரத்திற்காக உடலை இழைத்து, கூட்டி என மிகவும் மெனக்கெட்டு இருந்தார்.

63வது தேசிய விருது அறிவிக்கப்பட்டத்தில் விக்ரமிற்கு எந்த ஒரு தேசிய விருதும் அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 10ம் தேதி சென்சார் செய்யப்பட்ட படம் என்பதால், தேசிய விருதுகள் தேர்வு பட்டியலில் 'ஐ' திரைப்படம் இருந்தது.

விக்ரமுக்கு விருது கிடைக்காததால் ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். மேலும், விக்ரமுடன் 'தூள்', 'சாமி', 'அந்நியன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த விவேக் "நண்பா விக்ரம்,"ஐ" காக உடலை பெருக்கினாய்; பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!" என்று தனது பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இவருடைய இந்த ட்வீட்டிற்கும் தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். தனுஷ், 'ஐ' இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் இந்த ட்வீட்டை ரி-ட்வீட் செய்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in