விவசாயிகளைக் காக்க விஷாலின் புதிய திட்டம்

விவசாயிகளைக் காக்க விஷாலின் புதிய திட்டம்
Updated on
1 min read

விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்காக நடிகர் விஷால் புதிய திட்டம் ஒன்றை வகுத்து களம் இறங்கியிருக்கிறார்.

டிராக்டர் கடன் அடைக்காததால் விவசாயி பாலன் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து கடன் பிரச்சினையால் விவசாயி அழகர் தற்கொலை செய்து கொண்டார்.

கடன் பிரச்சினையால் விவசாயி அழகர் தற்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, "மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். நண்பர்களே இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதற்காக தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கவிருக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து விஷாலிடம் கேட்ட போது, "எனது நண்பர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை அனுப்பினார்கள்.

துபாயில் இருந்து நண்பர் ஒருவர் 1.லட்ச ரூபாய் அனுப்பி இருக்கிறார். டெல்டா விவசாயிகளின் பிரச்சினை என்னவெல்லாம் இருக்கிறது என்று விசாரிக்க சொல்லியிருக்கிறேன். முழுமையாக விசாரித்து விவசாயிகளின் பிரச்சினைகள் என்னவென்று அலசி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பணம் கொடுத்து உதவ இருக்கிறேன்.

தற்போது நிறைய உதவிகள் கேட்டு வருகிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக பணம் கொடுத்துவிடாமல் முழுக்க விசாரித்து மட்டுமே கொடுக்க இருக்கிறேன். உண்மையில் வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உதவி செய்துவிட்டு, பணம் அனுப்பிய நண்பர்களுக்கு இவருக்கு உதவி செய்திருக்கிறேன் என்று கூற திட்டமிட்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in