

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'கோ 2' படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
சரத் மாந்தவா இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ரானி நடிப்பில் தயாராகி வரும் படம் 'கோ 2'. லியோ ஜேம்ஸ் இசையமைத்து வரும் இப்படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு இருந்தாலும், படத்தின் ட்ரெய்லர் மற்றும் படம் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. முழுக்க அரசியல் களம் தான் படத்தின் கதைக்களம் என்பதால் படக்குழு சரியான வெளியீட்டு தருணத்திற்காக காத்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்திருப்பதால் 'கோ 2' படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. "யாருடனும் கூட்டணி கிடையாது தனித்து வருகிறோம்" என்று வாசகம் அடங்கிய 'கோ 2' படத்தின் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அரசியல் களம் சார்ந்து படத்தை விளம்பரப்படுத்தவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.