புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு விஷால் ஆறுதல்

புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு விஷால் ஆறுதல்
Updated on
1 min read

புனித் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்ற நடிகர் விஷால் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘எனிமி’ படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் புனித் ராஜ்குமார் தனது சொந்தச் செலவில் படிக்க வைத்துக் கொண்டிருந்த 1800 குழந்தைகளின் கல்விச் செலவைத் தான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷால் அறிவித்தார்.

நேற்று (நவ.17) கர்நாடக திரைப்பட சம்மேளனம் சார்பில் புனித் ராஜ்குமாருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஷால் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில் இன்று புனித் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்ற விஷால் அங்கு அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். புனித் ராஜ்குமார் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். இந்தப் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால் ''புனித் நம்மோடு இல்லை என்பதை இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in