

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த 'கொடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுற்றது. இப்படத்தில் தனுஷ் உடன் த்ரிஷா, அனுபமா, காளி உள்ளிட்ட பலர் நடித்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து 'வடசென்னை' மற்றும் ஹாலிவுட் படம் என இரண்டு படங்களில் தனுஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. மேலும் ஆச்சர்யமூட்டும் விதமாக கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு 'கொடி' படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கப்படும் என்று செய்திகள் வந்தன.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை கெளதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டையின்மெண்ட்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. நாயகியாக 'ஒரு பக்க கதை' படத்தின் நாயகி மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சென்னையில் படப்பிடிப்பைத் தொடர்ந்து மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.