இந்திய அணி மோசமான தோல்வி: சரத்குமார் காட்டம்

இந்திய அணி மோசமான தோல்வி: சரத்குமார் காட்டம்
Updated on
1 min read

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமாகத் தோல்வி அடைந்ததிற்கு சரத்குமார் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது.

இந்த தோல்வியால் சமூக வலைதளத்தில் பலரும் இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தற்போது இந்திய அணியின் தோல்வி குறித்து சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நமது அணியின் அவமானகரமான, இரண்டாம் தர, பொறுப்பற்ற ஒரு ஆட்டம். நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளால் நாம் அவமானப்படுத்தப்படும் முன் அவர்கள் வெளியேறிவிட வேண்டும். மற்றவர்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்காக விளையாடுகின்றனர். டி20 ஆட்டத்தை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது போல் தெரிகிறது. நமது ஆட்கள் ஐபிஎல் ஆடட்டும்"

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in