பிரியா பவானி சங்கருக்கு நன்றி கூறிய ஹரிஷ் கல்யாண்

பிரியா பவானி சங்கருக்கு நன்றி கூறிய ஹரிஷ் கல்யாண்
Updated on
1 min read

'பெல்லி சூப்புலு' படத்தில் தன்னுடன் நடித்த பிரியா பவானி சங்கருக்கு நன்றித் தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரீத்து வர்மா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்டோபர் 22-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநரான கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 22-ம் தேதி வெளியாகவுள்ளதால் படத்தினை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

இந்தச் சந்திப்பில் ஹரிஷ் கல்யாண் பேசியதாவது:

"'பெல்லி சூப்புலு' படம் பார்த்தபோது இந்த மாதிரி படத்தில் நடித்தால் நன்றாக இருக்குமே என நினைத்தேன் அப்போது என்னை படம் வைத்து படம் தயாரிக்க ஆள் இல்லை. பிக்பாஸ் போய் விட்டு வந்த பிறகு இந்தப்பட வாய்ப்பு வந்தது. மீண்டும் கை நழுவி, மீண்டும் வந்தது.

இதில் ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது. அதனால் தான் நம்மைத் தேடி வருகிறது எனத் தோன்றியது. இயக்குநரும் நானும் நெடுநாள் நண்பர்கள் முன்பே படம் செய்ய வேண்டும் எனப் பேசியுள்ளோம், இப்போது அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி. இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுமே நீங்கள் எளிதில் உணர்ந்துகொள்ளக்கூடிய பாத்திரங்களாக இருக்கும்.

டிஸ்னி மாதிரி ஓடிடியில் வருவதால் அனைவரையும் பெரிய அளவில் சென்று சேரும் என நம்புகிறோம். இந்தப்படத்தில் "போதை கனவே" பாடல் எனக்கும் பிடிக்கும். இசை அருமையாக இருந்தது. 18 படங்கள் நடிக்கும் பிஸியான நேரத்திலும், எங்கள் படத்திற்கு வந்து நடித்து கொடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு நன்றி. மிகச் சிறந்த ஒத்துழைப்பு தந்து நடித்துக் கொடுத்தார். அவருடன் மிகச்சிறந்த நட்பு உள்ளது.

எல்லோருமே கடுமையாக உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்"

இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in