

இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டேன் என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் 'விநோதய சித்தம்'. இதில் தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், பாலாஜி மோகன், அசோக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அபிராமி ராமநாதன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பலரும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படம் தொடர்பாக சமுத்திரக்கனி கூறியிருப்பதாவது;
"'விநோதய சித்தம்' படத்தில் நடித்த பிறகு உளவியல் ரீதியாக எனக்குள் மாறுதல் ஏற்பட்டது. இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலசந்தர் சாருடன் நாடகம் ஒன்று பார்த்தேன். அதிலிருந்து உருவானது தான் 'விநோதய சித்தம்'.
பாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குநர் இயக்குவான். ஒரு நல்ல கதை இயக்குநரை இயக்கும். அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக வெளிவந்துள்ளது.
இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக உளவியல் ரீதியாகச் சிறு மாற்றத்தை உணர்வீர்கள். நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பாக என் மனமார நம்புகிறேன்"
இவ்வாறு சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.