Published : 24 Sep 2021 05:40 PM
Last Updated : 24 Sep 2021 05:40 PM

யார் மனதையும் காயப்படுத்துவதற்காக 'ருத்ர தாண்டவம்' படத்தை எடுக்கவில்லை: இயக்குநர் மோகன்.ஜி

யார் மனதையும் காயப்படுத்துவதற்காக 'ருத்ர தாண்டவம்' படத்தை எடுக்கவில்லை என்று இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்தார்.

ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. இதில் ரிச்சர்ட், கெளதம் மேனன், தர்ஷா குப்தா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் 7ஜி சிவா கைப்பற்றியுள்ளார். அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'ருத்ர தாண்டவம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் மோகன்.ஜி பேசியதாவது:

" 'ருத்ர தாண்டவம்' படத்தின் கதையை என்னுடைய நண்பர், கிறிஸ்தவப் பாதிரியார் அளித்தார். அவர் 'திரௌபதி' படத்தைப் பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதனைப் படைப்பாக மாற்ற இயலுமா..? எனக் கேட்டுக் கேட்டுவிட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார். கிறிஸ்தவ மதத்தில் பல உட்பிரிவுகள் உள்ளன. கிறிஸ்தவ மதத்தைச் சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார்.

மலையாளத்தில் வெளியான 'டிரான்ஸ்' என்ற படத்தைப் பற்றி விரிவாக விவாதித்தார். இதனைத் திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழகக் கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் எனச் சொன்னார்.

சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்துவிடுவோம். வேரறுத்து விடுவோம் எனப் பேசுகிறார்கள். அதற்குக் கைதட்டல்களும் கிடைக்கின்றன. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார். இவையெல்லாம் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்துகொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனைப் பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும் பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்தவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்தவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கிக் கேள்வி கேட்கிறார்கள். இதைக் கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக்கொண்டு ’ருத்ர தாண்டவம்’ எனத் தலைப்பு வைத்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன். இதுதான் ’ருத்ர தாண்டவம்’ உருவான கதை.

இந்தத் தருணத்தில் நடிகர் ரிச்சர்டுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ’திரௌபதி’ படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர் அவர்.

தினமும் ஊதியம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தவரை, ஊதியம் வாங்காமல் என்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறினேன். இரண்டு கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்றும், எட்டு மாத காலம் என்னுடன் பயணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தேன். அவர் ஓராண்டு வரை என்னுடன் பயணித்தார். ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. அத்துடன் அவர் பயன்படுத்தும் வாகனத்தையும் எங்களுக்குக் கொடுத்து உதவினார். இந்த அளவிற்கு நடிகர் ஒருவர், இயக்குநரையும், அவர் வைத்திருக்கும் கதையும் நம்பி ஓராண்டு வரை பயணம் செய்ததால், அதற்குக் கைமாறாகத்தான் இந்தப் படத்தில் நாயகனாக அவரை நடிக்க வைத்தேன்.

இதைக் கடந்து எங்கள் இருவரிடையே புரிதலுடன் கூடிய நட்பு நீடிக்கிறது. நான் ரிச்சர்ட் உடன் தொடர்ந்து படங்களில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் 38, 39 நாட்களுக்குள் ஒரு படத்தின் படப்பிடிப்பைத் திட்டமிட்டு நிறைவு செய்கிறோம் என்றால், அதற்கு நாயகனின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. படப்பிடிப்பு ஏழு மணி என்றால் ஏழு மணிக்கு ஒப்பனையுடன் தயாராக ரிச்சர்ட் இருப்பார். படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் எந்த ஒரு நெருக்கடியைக் கொடுக்காமல் வீட்டுக்குச் செல்வார். இதுபோன்ற ஒரு நாயகன் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருதுகிறேன். தமிழ் சினிமா இவரைக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய இயக்கத்தில் வெளியான ’பழைய வண்ணாரப்பேட்டை’ மற்றும் ’திரௌபதி’ ஆகிய படங்களில் தெரிந்த முகங்கள் யாரையும் நடிக்க வைக்கவில்லை. அனைவரும் புதுமுகங்கள்தான். புதுமுகங்களைத்தான் நடிக்க வைத்தேன். திரைத் துறையில் எனக்கு அதிக அளவு நண்பர்கள் கிடையாது. மேலும், எனக்குத் தெரிந்த சினிமாவும் அவ்வளவுதான். நான் ஒரு சுயாதீன திரைப்படப் படைப்பாளர். சினிமாவைத் தெரிந்து கொள்வதற்காக நான் டீக்கடைகளிலோ, மதுபான பார்களிலோ நேரத்தைச் செலவிடுவதில்லை. அதுபோன்ற நண்பர்களையும் சம்பாதித்தது இல்லை. படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் ராயபுரத்தில் உள்ள என்னுடைய நண்பர்களுடன் இணைந்து நேரத்தைச் செலவழிப்பதுதான் என்னுடைய பொழுதுபோக்கு.

இந்நிலையில் டத்தோ ராதாரவியைச் சந்தித்து கதையைச் சொல்ல வேண்டும் என்றபோது எனக்குள் நிறைய தயக்கம் இருந்தது. நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் டத்தோ ராதாரவியைச் சந்தித்து கதையைக் கூறினேன். அப்போது அவர் ஒரு திருத்தத்தைச் சொன்னார். அதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இப்படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன திருத்தத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு எனக்குத் திரையுலகப் பக்குவம் இல்லாததால், சிறிது கால அவகாசம் கேட்டுவிட்டுப் பிறகு, அவர் கேட்ட விஷயத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு சம்மதம் தெரிவித்தேன். அது என்னவெனில் இந்தப் படத்தில் அவர் நீதிமன்றத்தில் பேசும்பொழுது ‘நான் ஒரு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் என்பதைப் பெருமிதமாக நினைக்கிறேன்’ என்பார்.

மேலும், அவர் நடிப்பதற்குச் சம்பளமாக ஒரு தொகையைக் கேட்டார். அது இந்தப் படத்திற்கான பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லை என்பதால், நான் பதிலேதும் கூறாமல் திரும்பிவிட்டேன். பிறகு மீண்டும் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர் 7ஜி சிவா பரிந்துரை செய்தார். ஆனால் அவரைச் சந்திக்க எனக்கு எனக்குத் தயக்கமாக இருந்தது ஏனெனில் ’திரௌபதி’ படம் வெளியான பிறகு என்னைப் பற்றி சமூக வலைதளத்தில் எதிர்மறையான விமர்சனங்கள், பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். சினிமாவை சினிமாவாக தான் பார்ப்பார்கள். நீங்கள் எந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களோ அதேபோல் அவர்களும் பல விஷயங்களில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். திரைத்துறையில் ஒரு உண்மையைச் சொல்வதற்குப் பெரிய துணிச்சல் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. அதனால் அவரைச் சந்தித்துக் கதை கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

கௌதம் மேனனைச் சந்தித்தேன். கதையைக் கேட்டுவிட்டு நான்தான் நடிக்க வேண்டுமா? எனக் கேட்டார். அவரிடம் இந்தக் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்.., எனக்குத் திரை உலகில் வெற்றியும், அங்கீகாரமும் கிடைக்கும் எனக் கூறினேன். அவர் உடனே, கதையாகவும், திரைக்கதையாகவும் நன்றாக இருக்கிறது. ஒரு நடிகராக என்னுடைய ஒத்துழைப்பை எந்த அளவுக்கு வழங்க முடியுமோ அந்த அளவுக்கு வழங்குகிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.

நடிகர் மனோபாலா சார் அதிரடியாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். விரைவில் ஸ்னீக் பீக்காக வெளியாகவிருக்கிறது. அந்த முன்னோட்டக் காட்சிகள் வெளியான பிறகு நிச்சயம் சலசலப்பு உண்டாகும். இதற்கு எதிர்மறையாக விமர்சனங்கள் வரும். இதற்கு நான் இப்போதே பதிலளித்து விடுகிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் தவறு என்றால், நிஜத்தில் தலைவர் ஒருவர் மேடையில் பேசிய அத்தகைய பேச்சும் தவறுதான். தலைவர் ஒருவர் மேடையில் பேசிய பேச்சைத்தான் இப்படத்தில் வசனங்களாக இடம்பெற வைத்திருக்கிறேன். இந்த சலசலப்பு படத்தின் வெளியீட்டிற்கும், வெற்றிக்கும் பெரிய அளவில் உதவி செய்யும் என நம்புகிறேன்.

அதேபோல் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் நீங்கள் ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளப் பக்கத்தில் என்னுடைய மதத்தைப் பற்றியோ, என்னுடைய சமூகத்தைப் பற்றியோ, ஏதேனும் காயப்படுத்தும் வகையில் பேசினால், அதனை அப்படியே என்னுடைய படைப்பில் இடம்பெறும் கதாபாத்திரம் பேசும் வகையில் வைத்துவிடுவேன். அதனால் மற்றவர்களைக் காயப்படுத்தும் முன் தீர யோசனை செய்து வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

'திரௌபதி' 360 திரையரங்குகளில் வெளியானது. 'ருத்ர தாண்டவம்' அக்டோபர் 1-ம் தேதியன்று 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என விநியோகஸ்தர் 7 ஜி சிவா வாக்குறுதி அளித்து இருக்கிறார். அது நடைபெறும் என நினைக்கிறேன். அது நடைபெற்றால் இப்படத்தின் வெற்றி உறுதியாகிவிடும்.

இந்தப் படம் யார் மனதையும் காயப்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை. ஒரு படைப்பாளியாக எனக்குக் கிடைத்த ஒரு நல்ல கருவை அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு மோகன்.ஜி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x