

தனது ஃபேஸ்புக் கணக்கை நீக்கியது ஏன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.
அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சேதுபதி'. நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்தை வான்சன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்களிடம் எப்படி வரவேற்பு பெறுகிறது என்பது திங்கட்கிழமை தெரிந்துவிடும்.
இந்நிலையில் தனது ஃபேஸ்புக் கணக்கை நீக்கியது ஏன் என்று 'தி இந்து' ஆங்கிலம் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அதில், "நான் சில காலம் பேஸ்புக்கில் இணைந்திருந்தேன். கமெண்டுகளுக்கு பதில் சொல்வேன், ரசிகர்களின் பாராட்டுக்கு நன்றி சொல்வேன். ஆனால் பேஸ்புக் எனது உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வது போல உணர்ந்தேன்.
ஒருவர் சோகமான செய்தியை பகிர்ந்ததை காண நேரிட்டது. ஆனால் அது குறித்து நான் யோசிக்கும் முன்னரே வேறொருவர் நகைச்சுவையான மீம் ஒன்றை அவர் கணக்கில் பகிர்ந்திருந்தார். இது என்னை குழப்பமடையச் செய்தது. அந்தச் செய்திக்காக அழுவதா, இல்லை இந்த மீமுக்காக சிரிப்பதா எனத் தெரியவில்லை.
ஒரு மனிதனாக இந்த முரண் என்னை பாதித்தது, அதனால் என் கணக்கை டெலிட் செய்து விட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.