புலி விழாவுக்குப் பின் மன உளைச்சல்: டி.ராஜேந்தர் புலம்பல்

புலி விழாவுக்குப் பின் மன உளைச்சல்: டி.ராஜேந்தர் புலம்பல்
Updated on
2 min read

'புலி' இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளானதாக 'போக்கிரி ராஜா' ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.டி.செல்வக்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் 'அத்துவுட்டா' என்ற ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினரோடு டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது, "’புலி’ படத்துக்குப் பிறகு எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஏனென்றால் அந்த விழாவில் ’புலி’யைப் பற்றி தொடர்ச்சியாக பேசினேன். எனக்கு ’புலி’ என்றால் பிடிக்கும். ஈழத்தமிழர்களுடைய ஆதரவாளன் நான். இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக என் பதவியை ராஜினாமா செய்த பிழைக்கத் தெரியாத தமிழன். அந்த உணர்வு எனக்கு உண்டு.

டி.ஆர் பேசிய அடுக்கு மொழியை மற்றவர்கள் வேறு பார்வையில் பார்த்தால் தப்பில்லை. அது எந்த தொலைக்காட்சியில் வெளியிட்டாங்களோ, அதற்கு யாரெல்லாம் எப்படி பார்த்தார்கள் என்பது கடவுளுக்குத் தெரியும். நான் அந்த விழாவுக்கு சென்ற பிறகு மன உளைச்சலுக்கு ஆளானேன். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். இந்த விழாவுக்கு பார்வையாளனாகவும், நண்பனாகவும் வருகிறேன் என்று சொன்னேன். இங்கு பேச்சாளராக வரவில்லை. 'வாலு' படம் பிரச்சினையின் போது வந்து நின்ற ஒரே ஒரு இதயம் பி.டி.செல்வக்குமார் தான்.

நான் இங்கு வந்து நிற்பதற்கு கடவுள் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை மூன்றும் தான் காரணம். இந்த மூணு கையை வைத்து தான் என் வாழ்க்கை. இந்த மூணு கை இருந்ததால் தான் நான் வாழ்க்கையில் ஆகவில்லை மொக்கை. இப்படி பேசுவதால் என்னிடம் கொடுத்திருக்கிறார்கள் மைக்கை.

டி.ராஜேந்தர் இதற்கு முன்னாடி இப்படி அடுக்குவான் என்று தெரியாதா. நீ நக்கல் பண்ணினால், நானும் நக்கல் பண்ணுவேன். வாழ்க்கையில் யார் தான் நக்கல் பண்ணவில்லை. நான் அத்தனை புலியை அடுக்கினேன் என்றால் எல்லாமே என் மனதில் இருந்து வந்தது. 'புலி' என்று தலைப்பு வைத்ததிற்கு ஒரு தில் வேண்டும். அந்த தில்லை வைத்து தான் என்னிடம் இருந்து சொல் வந்தது.

என்னை பொறுத்தவரைக்கும் ஹன்சிகா ஒரு குழந்தை மாதிரி. 'வாலு' படத்தை வேறு ஒருவர் தயாரித்திருந்தார். அப்படத்தை நான் வாங்கி கடன் பட்டு வெளியிட்டேன். தாறுமாறு என்ற பாடலை அந்த தயாரிப்பாளர் படப்பிடிப்பு பண்ணவில்லை. அப்பாடலை நான் ஒரு கோடி ரூபாய் செலவில் படப்பிடிப்பு பண்ணிய போது, ஹன்சிக TR UNCLE கேட்டாரா என்று சொல்லி வந்து எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் வந்து நடித்துக் கொடுத்ததற்கு நன்றி.

நான் அடுத்தவர்களை மாற்றுவதை விட, என்னை நான் மாற்றிக் கொண்டேன். எதுகை மோனை மட்டுமல்ல அடுக்கு மொழியிலும் பேசத் தெரியும். ஒரு காட்சியைச் சொல்லும்போது கூட நாயகியை தொடாமல் 35 வருடங்கள் வாழ்த்திருக்கிறேன். இதற்கெல்லாம் யாருமே விருது தர மாட்டார்கள். எனக்கு தேவையுமில்லை. இன்று வரைக்கும் நான் விருதுக்கு அலைந்ததே இல்லை. இந்த காலத்தில் விருதையும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டியதிருக்கிறது. மக்கள் கொடுத்த ரிவார்டு மட்டுமே போதும்" என்று தெரிவித்தார்.

மேலும், படக்குழுவினர் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்தி பேசி எதுகை மோனையோடு தனது உரையை முடித்துக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in