படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கக்கோரிய விஜய் சேதுபதி: மவுனம் காத்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் நேற்று இரவு சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி. படம் எம். சாம்ராஜ்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் நேற்று இரவு சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி. படம் எம். சாம்ராஜ்.
Updated on
1 min read

புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கக்கோரி, நடிகர் விஜய் சேதுபதி கோரியதற்கு முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்து விட்டு, வழக்கம்போல் பரிசீலிப்பதாக குறிப்பிட்டார். இதற்கு காரணம் புதுச்சேரியை கரோனா காலத்தில் திரைத்துறையினர் கண்டுக்கொள்ளாததும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா பரவல் குறைந்ததால், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நூறு பேருடன் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போது, தமிழ், மலையாளம் என, பல்வேறு மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. அதேபோல், தொலைக்காட்சி, விளம்பர படப்பிடிப்புகளும் நடக்கின்றன.

தற்போது 'காத்துவாக்குல காதல்' படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு (ஆக. 19) முதல்வர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தபோது, நடிகர் விஜய் சேதுபதி அவரை சந்தித்தார்.

இச்சந்திப்பு தொடர்பாக, முதல்வர் தரப்பில் விசாரித்தபோது, "நடிகர் விஜய் சேதுபதி முதல்வரை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் திரைப்பட படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு கட்டணமாக ரூ. 5 ஆயிரம் முன்பு வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ. 28 ஆயிரம் வசூல் செய்யப்படுகிறது. புதுச்சேரியில் திரைப்பட படிப்படிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கோரினார். அதற்கு முதல்வர் ரங்கசாமி அமைதியாக இருந்தார். தொடர்ந்து அவருடன் வந்தோரும் இக்கோரிக்கையை குறிப்பிட்டதால் வழக்கம்போல் பரிசீலிப்பதாக குறிப்பிட்டார்" என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நிவாரணத்தொகையை பல்வேறு தரப்பினர் அரசிடம் வழங்கினர். ஓய்வூதியம் வாங்குவோர் தொடங்கி சிறு குழந்தைகள் வரை பலரும் தங்களால் இயன்ற உதவியை தந்தனர். புதுச்சேரியில் தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் தொடங்கி, பலரும் கரோனா காலத்தில் பலரும் உணவு தொடங்கி பல மருத்துவ சாதனங்களை தந்தனர்.

நடிகர் விஜய் மட்டுமே ரூ. 5 லட்சம் நிதி உதவி அளித்தார். அவரை தவிர திரைத்துறையினர் யாரும் புதுச்சேரி அரசுக்கு நிவாரணமோ, உதவியோ தரவில்லை. தற்போது நிதி நெருக்கடியில் புதுச்சேரி உள்ள சூழலில் பலவித வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிக வருவாய் ஈட்டும் திரைத்துறையினர் நாள் கட்டணத்தை குறைக்க சொல்வதை ஏற்க முடியாது. அதனால்தான் முதல்வர் உறுதி தரவில்லை" என்று குறிப்பிடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in