Published : 14 Aug 2021 03:40 PM
Last Updated : 14 Aug 2021 03:40 PM

பட்டியலின மக்கள் குறித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கேரளாவில் பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுன் கைது

சென்னை

பட்டியலின மக்கள் குறித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் மீரா மிதுன். அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது இவர் வழக்கம். சமீபத்தில் பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளைக் குறித்து கொச்சையாகப் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார். மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கொடுக்கப்பட்ட புகார்களின் பேரில், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்யத் தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.

அதைத் தொடர்ந்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவில், “தாராளமாக என்னைக் கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்குப் போகவில்லையா, ஆனால், என்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாகத் தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று சொன்னேன்” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று (ஆகஸ்ட் 19) கைது செய்தனர். அவரை அழைத்து வரவுள்ளனர்.

கடந்த ஆண்டு நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்களை அவதூறாகப் பேசியதற்காக அவர்களின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுத்தனர். அந்த வகையில், சென்னை எம்.கே.பி.நகர் காவல் துறையினர் மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல் நடத்தியதாக கேரளாவில் 3 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x